விபத்து நடந்த ஸ்பாட்டுக்கு 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் செல்லாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்…* தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி உத்தரவு..!
விபத்து பகுதிக்கு செல்ல ஆம்புலன்சுக்கு 10 நிமிட ‘கெடு’ விதித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விபத்து பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் குறித்த நேரத்தில் செல்லாமல் தாமதம் செய்வதாக சாலை பாதுகாப்புக்கான சுப்ரீம் கோர்ட்டு குழு குறிப்பிட்டு இருந்தது. தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இதனை கருத்தில் கொண்டு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அவசரகால நடவடிக்கையில் தாமதத்தை குறைக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, 10 கி.மீ. சுற்றளவுக்குள் விபத்து நடந்தால், அந்த பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆம்புலன்ஸ், 10 நிமிட நேரத்துக்குள் சென்றடைய வேண்டும். அப்படி 10 நிமிடத்துக்குள் செல்லாவிட்டால். ஒரு தாமதத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 10 கி.மீ. சுற்றளவை தாண்டிய பகுதியில் விபத்து நடந்தால், அந்த விகிதாச்சாரத்துக்கு ஏற்ப அனுமதிக்கப்பட்ட நேரத்தை அதிகரித்து கொள்ளலாம். ஆம்புலன்சில் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ். கருவி மூலம் நேரம் சரிபார்க்கப்படும். விபத்து அழைப்பை ஏற்றுக்கொண்ட ஒரு மணி நேரத்துக்குள், விபத்தில் பாதிக்கப்பட்டவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதுபோல், அவசர கால அழைப்பை புறக்கணித்தால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்கீழ், சுமார் 50 ஆயிரம் கி.மீ.நெடுஞ்சாலைகளில் சுமார் 3 ஆயிரம் ஆம்புலன்ஸ்களும், 1,000 ரோந்து வாகனங்கள் மற்றும் கிரேன்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஆன்ட்ராய்டு செல்போன் சாதனங்களும், பிரத்யேக ‘சிம்’களும் வழங்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை விபத்துகளுக்கு ‘1033’ என்ற உதவி மைய எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Comments are closed.