காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர்…* ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் விஜய் பாராட்டு..!
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆண்களுக்கான பளுதூக்குதல் 65 கிலோ பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்றார். இப்போட்டியில் ஸ்னாட்ச் முறையில் 126 கிலோவையும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 160 கிலோவையும் தூக்கி 286 கிலோ எடையுடன் இரண்டாம் இடம் பிடித்தார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். அவரது சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.