இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜிந்த் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஹரியானா ஆளுநர் அசிம் குமார் கோஷ், முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்ததை அடுத்து, ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து சோனிபட் ரயில் நிலையத்தை நோக்கி ஹைட்ரஜன் ரயில் புறப்பட்டது. ரயிலில் பள்ளி மாணவர்கள் பலரும் பயணித்தனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று ஹரியானாவும், ஜிந்த் பகுதியும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. இங்கிருந்து முதல் ஹைட்ரஜன் ரயிலை நாடு பெற்றுள்ளது என்று கூறினார்.
சென்னையில் தயாரான பெட்டிகள்,
இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரயில் இன்ஜினை தயாரிக்க கடந்த 2021-ம் ஆண்டு முயற்சிகள் தொடங்கின. ரூ.136 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டல ரயில்வே இத்திட்டத்தை 2022 ஏப்ரலில் தொடங்கியது. இத்திட்டத்துக்கான டெண்டர் ஹைதராபாத்தை சேர்ந்த மேதா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந் நிறுவனம்தான் எரிபொருட்களை சப்ளை செய்கிறது. ஹைட்ரஜன் ரயிலை வடிவமைக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிதொழிற்சாலையில் (ஐசிஎஃப்) நடைபெற்றன. பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடைபெற்றன.
இதையடுத்து, ரயிலை அறிமுகப்படுத்த கடந்த மே 22-ம் தேதி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜெர்மனியில் முதன்முதலாக உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் 2018-ம் ஆண்டில் இயக்கப்பட்டது. பின்னர் ஜப்பான், சீனா, அமெரிக்கா தங்கள் நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயிலை இயக்கின என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.