Rock Fort Times
Online News

செம்மொழி பூங்கா அமைப்பதில் ரூ.40 கோடி ஊழல் தொடர்பாக காங்கிரஸ்- திமுக கவுன்சிலர்கள் பயங்கர மோதல்: 5 பேர் சஸ்பெண்ட்…!

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று( ஜூலை 17) நடைபெற்றது. கூட்டத்தில் நகரின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் காயத்ரி, கோவை செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிகளில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி திடீரென முழக்கங்களை எழுப்பினார். பூங்கா அமைக்கும் ஒப்பந்தப் பணிகளில் சுமார் ரூ. 40 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கவுன்சிலர்களும் குரல் எழுப்பினர் செம்மொழிப் பூங்கா குறித்து காயத்ரி அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்ததால், அவையிலிருந்த திமுக கவுன்சிலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. அந்த நேரத்தில், திமுக கவுன்சிலர்கள் தன்னை கீழே தள்ளிவிட்டதாக காயத்ரி குற்றம் சாட்டினார். இதனால் மாநகராட்சி கூட்ட அரங்கம் போர்க்களம் போலக் காட்சியளித்தது. இந்த அமளி காரணமாக காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி, கம்யூ., கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பூபதி, பிரபா, சாந்தி ஆகிய 5 பேரை 2 மாதம் சஸ்பெண்ட் செய்வதாக மேயர் அறிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்