Rock Fort Times
Online News

ஒரு வாரம் ‘சிக்கன்’ விற்பனை கிடையாது…* கோழி வணிகர்கள் கூட்டத்தில் தீர்மானம்..!

தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான கோழி வணிகர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், கறி கோழிக்கு தீவனக் கட்டுப்பாடு தொடர்பாக வழிகாட்டி, நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அரசு எடுத்துரைக்க வேண்டும். கறி கோழி விற்பனைக்கு வரும் முன்னர் 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்கும் நடைமுறையை கோழி உற்பத்தியாளர்கள் கடைபிடிக்க வேண்டும். கோழிகளுக்கு தீவனம் கொடுப்பதால், அந்த கோழிகள் எடை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கோழிகள் உடலில் தீவனங்கள் தங்கி ஜீரணம் ஆவதில்லை. இதனால் அதன் கழிவுகள் வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, விற்பனைக்காக அனுப்பும் கறி கோழிகளுக்கு 15 மணி நேரத்துக்கு முன்னரே தீவனம் வழங்கும் நெறிமுறையை அவசியம் உற்பத்தியாளர்கள் கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால், எங்களது கோரிக்கையை ஏற்காததை கண்டித்து ஒரு வார காலத்துக்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இனி வரும் காலங்களில் மகாவீர் ஜெயந்தி, வள்ளலார் தினம் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் கறி கோழி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்