வியட்நாமிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் படகு கவிழ்ந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை மேலத்தெரு பகுதியை சேர்ந்த பாலாஜியும் (வயது 40) ஒருவர். இவரது தந்தை நடேசன். பாலாஜி, அந்த பகுதியின் பிரபலமான தொண்டர் சண்முகம் பிள்ளையின் பேரனாவார். இவர் அரியமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல மொபைல் போன் மொத்த விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் லாவா மொபைல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இன்பச் சுற்றுலாவில் வியட்நாமிற்கு கடந்த 8ம் தேதி இரவு புறப்பட்டு சென்றிருந்த இவர் அங்கு நடந்த படகு விபத்தில் உயிரிழந்து விட்டார். இவருக்கு விஷ்ணு பிரியா என்ற மனைவியும், ரமேஷ் (13), ஜித்து (10) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். படகு விபத்தில் பாலாஜி உயிரிழந்த தகவல் அறிந்த அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். அந்தப் பகுதியில் உள்ளவர்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவரது உடலை ஸ்ரீரங்கத்திற்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.

Comments are closed.