Rock Fort Times
Online News

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு !

வார இறுதி நாட்களை முன்னிட்டுப் பொதுமக்களின் வசதிக்காகச் சென்னையில் உள்ள முக்கியப் பேருந்து நிலையங்களில் இருந்தும், பிற நகரங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை (ஜூலை 10)  முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (இயக்கம்) ஜெரோலின் லிஸ்பன் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தார், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10-ந் தேதி (நாளை) வெள்ளிக்கிழமை அன்று 420 பஸ்களும், 11-ந் தேதி (சனிக்கிழமை) 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 10-ந் தேதி வெள்ளிக்கிழமை 55 பஸ்களும், 11-ந் தேதி சனிக்கிழமை 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தார் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 10 மற்றும் 11-ந் தேதிகளில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் தலா 20 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 445 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்