நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்தது. திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரசின் ஆதரவை நாடியது. அவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக ஆதரவுடன் விஜய் முதலமைச்சர் ஆனார். எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்று விட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் திமுக- காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்லியில் வருகிற 8-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இது ஒருபுறம் இருக்க தங்களுக்கு துரோகம் செய்த காங்கிரசை, திமுக சரமாரியாக சாடி வருகிறது. அந்த வகையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியான கட்டுரையில் ராகுல்காந்தி குறித்து சரமாரியாக விமர்சிக்கப்பட்டிருந்தது. திமுகவுடன் இருந்து குழிபறித்தார், இரட்டை வேடம் போடுகிறார், காங்கிரஸ் கட்சியை குழிதோண்டி புதைக்கிறார் என சகட்டுமேனிக்கு திமுக விமர்சித்திருந்தது.
காங்கிரஸ் பதிலடி,
இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், மக்கள் ஏன் திமுகவை நிராகரித்தார்கள் என்பதை ஆராய்வதற்கு பதிலாக, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியையும், காங்கிரஸையும் தாக்குவது தோல்வியை மறைக்கும் முயற்சியாக மட்டுமே தெரிகிறது. உதயநிதி தலைமையால் இந்த ஒரு தோல்வியைக் கூட அரசியல் நாகரிகத்துடன் எதிர்கொள்ள முடியவில்லை. மாறாக, கூட்டணியில் இருந்த தோழமைக் கட்சிகள் மீதும், குறிப்பாக காங்கிரஸ் மீதும் விஷ வார்த்தைகளை கக்கி வருகிறது. திராவிட மாடல்” என்ற பெயரில் நடந்தது வளர்ச்சி அரசியல் அல்ல, “கமிஷன் மாடல்” அரசியல் என்ற உணர்வு மக்களிடையே வலுவாக உருவானது. இதுதான் தோல்விக்கு முக்கிய காரணம். தலைவர் ராகுல் காந்தி அதிகாரத்திற்காக அரசியல் செய்பவர் அல்ல. பதவிக்காக கொள்கையை விற்கும் தலைவர் அல்ல. . தினமும் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, வெளியில் ஒரு பேச்சும், உள்ளே ஒரு பேரமும் நடத்துபவர்களுக்கு அவரது மதியைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.