தவெக ஆட்சியில் குழந்தைகள் பாதுகாப்பின்றி இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது : “சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் ஒரு சிறுவனை கொடூரமாகத் தாக்கி, பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. சிறுவன் தன்னைத் தற்காத்துக் கொள்ள டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்து சென்று புகார் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் நாள்தோறும் அதிகரிக்கும் குற்றச்செயல்களின் தன்மை அச்சமூட்டுகிறது. எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பின்றி உள்ளனர். ‘சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்’ என நடத்தப்பட்ட நிகழ்வுகள் வெறும் சம்பிரதாய கூட்டங்களாக மட்டுமே மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. வேலியே பயிரை மேயும் நிலை உருவாகியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் “கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கை உணர்வோடு காக்க வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.