கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும் என்று ஆரம்பம் முதலே விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வந்தது. ஆனால், திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள் புதிதாக சேர்ந்துள்ளதால் அவ்வளவு தொகுதிகள் ஒதுக்க இயலாது என திமுக கூறிவந்தது. இதனால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று( மார்ச் 24) சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, சட்டமன்ற தேர்தலில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தானது. 6 தனித் தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதியில் விசிக களம் காண உள்ளது.

Comments are closed.