அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்டு ரத்து வழக்கு: ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…!
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு நியமனம் செய்யப்பட்டார். பொதுவாக துணைவேந்தர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதன்படி, அவருடைய பதவி காலம் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் நிறைவு பெற்றது. அவருடைய பதவி காலம் முடிவடைந்து இருந்தாலும், பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் துறையில் பேராசிரியராக பணியை மேற்கொண்டு வந்தார். இதனிடையே, பேராசிரியர் பணியில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதியுடன் வேல்ராஜ் ஓய்வு பெற இருந்தார். ஆனால் அதேநாளில் அவரை சஸ்பெண்டு செய்து பல்கலைக்கழக சிண்டிகேட் உத்தரவு பிறப்பித்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுத்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகவும், அந்த முறைகேட்டில் அப்போது துணைவேந்தராக இருந்த வேல்ராஜ்-க்கும் தொடர்பு இருந்ததாகவும், துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர் எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றியபோது நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு வேல்ராஜ் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அதேவேளை, பணி ஓய்வு நாளில் முன்னாள் துணை வேந்தர் வேல்ராஜை சஸ்பெண்டு செய்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி ரத்து செய்தார். பல்கலைக்கழக வேந்தரும், மாநில ஆளுநருமான ஆர்.என்.ரவியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று(பிப்.24) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Comments are closed.