தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்தனர். அதற்கான பதில் உரையையும் அமைச்சர்கள் அளித்தனர். இன்றைய (பிப்.20) கூட்டத் தொடரில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் சிறப்பான இடைக்கால நிதிநிலை அறிக்கையையும், பதிலுரையையும் வழங்கியிருக்கிறார்கள். அடுத்த இரு மாதங்களில் இதனை கூடுதல் விரைவுடன் தொடர்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களின் நம்பிக்கை எங்களை ஆட்சியாளராக தொடரச் செய்யும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் திராவிட மாடல் அரசை நடத்தி இருக்கிறோம் என்ற மனநிறைவு எனக்கு இருக்கிறது. எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மிகச்சிறப்பாக நடத்தியதாக நான் உணர்கிறேன். எங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என பிரித்துப் பார்க்காமல் நான் செயலாற்றியிருக்கிறேன். 234 தொகுதிகளையும் எனது தொகுதிகளாகவே நினைத்து பணிபுரிந்தேன். ஆட்சி செய்ய மிகப்பெரிய வாய்ப்பை தந்த தமிழ்நாட்டு மக்களுக்கும், என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் எனது நன்றிகள். திராவிட மாடலின் 5 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தினால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், இன்று கூடுதல் வலிமைப் பெற்று, தமிழ்நாட்டை மேலும் ஏற்றம்பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும், எதனையும் எதிர்கொள்ளக்கூடிய வல்லமையையும் பெற்றுள்ளேன். எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும். ஆராய்ந்து முடிவெடுக்கும் பண்பு, அந்த முடிவினால் விளையும் பயன், பயன்பெற்றவர்களின் உயர்வினால் உண்டாகும் வளம், வளத்தினால் விளைந்திடும் இன்பம், இன்பத்தால் கிடைத்திடும் நன்மை என்பதுதான் இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. தம்முடைய சுயமரியாதை எள் முனையளவு சீண்டப்பட்டாலும், அது யாராக இருந்தாலும் எதிர்குரல் கொடுக்கும் திசையில் முதல் ஆளாக நான் இருப்பேன். மற்றபடி, கவர்னருக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. ஆகவே, தமிழர் பண்பாட்டை மனதில்கொண்டு அவருக்கும் எனது நன்றிகள். அரசின் குறைகளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி. சாதனைகளுக்கு தோள் கொடுத்த தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி கூறுகிறேன். தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்கு பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை ஆகியவை தேவை. சட்டப்பேரவையில் கருத்து மோதல்கள் ஏற்படும்போது அனுபவத்தாலும், அறிவாற்றலாலும் அதனை உரிய வகையில் எதிர்கொள்ளும் என் அண்ணன் துரைமுருகன், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைந்து உடல் நலம் பெற்று வரவேண்டும் என விரும்புகிறேன். அவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Comments are closed.