விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், திருச்சி- தஞ்சை சர்வீஸ் சாலை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டியது மிகப்பெரிய தேவையாக உள்ளது. திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறது. அதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை. இந்தியா முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும், தொடர்ந்து மூட வேண்டும் என்ற அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம். அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது. ஆளும் அரசுக்கு இதனை நினைவூட்டுகிறேன். இளைய தலைமுறைகளை பாதுகாக்க வேண்டும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் இதனை அறிவிக்க வேண்டும். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியே போகாது. அவர்கள் ஆட்சியில் பங்கு கேட்பதற்கு உரிமை இருக்கிறது. அதனால் கூட்டணி உடைந்து விடாது. கட்டாயமாக திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கும். எங்களுக்கான தொகுதியை உரிமையோடு கேட்போம். பிரச்சனை இல்லாத கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி தான். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.