தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க வுடன், மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க. கைகோர்த்துள்ளது. இந்த கட்சிகள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி 23ஆம் தேதி) சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு “இரட்டை என்ஜின் ஆட்சி தேவை” என்று பேசினார். அதாவது, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகியவற்றை என்ஜின்களாக உருவகப்படுத்தி அவர் கருத்து தெரிவித்தார். இதனால் வெகுண்டெழுந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “டப்பா என்ஜின் ஆட்சி எல்லாம் தமிழகத்தில் எடுபடாது” என்று பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக, த.வெ.க. தலைவர் விஜய், கட்சியின் 3ஆம் ஆண்டு விழாவில் பேசும்போது, “டாப் என்ஜின் நாம் தான். தேர்தலில் நம்மை வெற்றிபெற வைக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்” என்று தெரிவித்தார். இவ்வாறு பிரதமர் மோடியின் ‘என்ஜின்’ பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாதம் பிப்ரவரி 28ஆம் தேதி (சனிக்கிழமை) மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றுவார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.