ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பகல்பத்து உற்சவம் நிறைவடைந்த நிலையில் தற்போது ராப்பத்து நடைபெற்று வருகிறது. ராப்பத்து உற்சவத்தின் 7ம் நாளான இன்று(05-01-2026) மாலை நம்பெருமாள் கைத்தல சேவை நடக்கிறது. இதையொட்டி பிற்பகல் 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ் தானத்திலிருந்து புறப்பட்டு சொர்க்க வாசலை கடந்து மாலை 5.45 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைகிறார். அங்கு திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடைபெறுகிறது. அதன்பின், உபயதாரர் மரியாதையுடன் பொது ஜனசேவை நடைபெறும். இரவு 11.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத் தியத்துடன் நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைகிறார். ராப்பத்து உற்சவத்தின் 8ம் நாளான நாளை(6ம் தேதி) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு வையாளி வகையறா கண்டருளுகிறார். இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார். அங்கு உபயதாரர் மரியாதையுடன் பொதுஜனசேவை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெரு மாள் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். நாளை சொர்க்கவாசல் திறக்கப்படாது. விழாவின் 10ம் திருநாளான 8ம் தேதி தீர்த்தவாரி நடைபெறும். 9ம் தேதி நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

Comments are closed.