திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தை, திருவெறும்பூர் தாலுகா காந்திநகர் 8-வது தெருவைச் சேர்ந்த முருகையா என்பவரின் மகன் குணசேகரன் நடத்தி வந்தார். குணசேகரனிடம் கடந்த 12.06.2009 அன்று பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய தலைமைக் காவலர் ராமசாமி என்பவர், “உன் மீது டெல்லியிலிருந்து கைது வாரண்ட் வந்துள்ளது” என்று பொய்யாக கூறி, கைது செய்யாமல் இருக்க ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மறுத்த குணசேகரன், 13.06.2009 அன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சூரக்குமரன் அவர்களிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய தலைமைக் காவலர் ராமசாமி, குணசேகரனிடமிருந்து ரூ.10,000 லஞ்சம் பெற்றபோது, கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது. சாட்சிகள் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவின் ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலித்த நீதிபதி புவியரசு, குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்தார். அதன்படி, ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 7-ன் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் 3 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், பிரிவு 13(2) r/w 13(1)(d)ன் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2,000 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் 3 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு, இரு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் சாட்சிகளை ஆஜர்படுத்தினர். அரசு சிறப்பு வழக்குரைஞர் கோபிகண்ணன் ஆஜராகி சிறப்பாக வாதாடினார். மேலும், புகாரளித்த குணசேகரன் கடந்த 14.02.2019 அன்று காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.