திருச்சி, ராமச்சந்திரா நகரில் ரூ.50 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணி: * மாநகராட்சி மேயர் மு அன்பழகன் ஆய்வு…!
திருச்சி மாநகராட்சி மண்டலம் -4, வார்டு எண் 62 ராமச்சந்திர நகர் மற்றும் டோபி காலனி கோரையார் பகுதி வரை மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதை வெளியேற்றுவதற்காக ராமச்சந்திரா நகர் முருகன் கோவில் முதல் சித்தி விநாயகர் நகர், கிருஷ்ணவேணி நகர், அப்துல் கலாம் நகர் மற்றும் டோபி காலனி வழியாக கோரையாறு வரை மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க திட்டமிடப்பட்டு பொது நிதியின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 300 மீட்டர் அளவில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில்
ஆம்னி பேருந்துகள் நிறுத்த கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்துகளுக்கென தனியாக பேருந்து நிலையம் ஏதும் இல்லை. தனியார் சொகுசு பேருந்து நிலையம் இல்லாததால், மத்திய பேருந்து நிலையத்தை சுற்றி ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்லும் நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே ஆம்னி பேருந்துகள் நிறுத்த நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் 85 சதவீதம் முடிவடைந்து உள்ளது .விரைவில் மீதமுள்ள பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது நகர பொறியாளர் பி.சிவபாதம், செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன், உதவி மண்டல தலைவர் துர்கா தேவி , செயற்பொறியாளர் வேல்முருகன், மாமன்ற உறுப்பினர் சுபா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.