தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் இன்று(டிச. 11) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1.ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக நமது வெற்றித் தலைவர் விஜயை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும், நமது கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, தலைவர்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
2. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
3. இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, நம் தமிழக மக்களைக் காக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
4. அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைகூவல் பொய்யுரைகளை தோலுரித்து, எதிரிகளை எதிர்கொண்டு தோற்கடிக்க, ஒரு வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.