ஆணாக இருந்தால் மட்டும் போதும். தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 தமிழக அரசு வழங்குகிறது என்று குறிப்பிட்டு ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், இது திரிக்கப்பட்ட தகவல். தமிழ்நாடு அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1,000 பெறுவதற்கு, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) 6 முதல் பிளஸ்-2 வரை படித்திருக்க வேண்டும். அந்த மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. படிப்புகளை தடையின்றி முடிக்கும் வரை மட்டும் தமிழ்நாடு அரசு ரூ.1,000 நிதியை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும். ஆணாக பிறந்த அனைவருக்கும் நிதி வழங்கப்படும் என்பது தவறான தகவல். வதந்திகளை நம்பவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.