விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: பழங்குடியின திமுக எம்.எல்.ஏ.பொன்னுசாமி உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி…!
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி இன்று (அக்.23) உயிரிழந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி. அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று – பழங்குடியின மக்களின் நலனுக்காக உழைத்த கு.பொன்னுசாமி எம்.எல்.ஏ. மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கை உணர்வோடு மக்களுக்குத் தொண்டாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் வாழ்வார்!” என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் பொன்னுசாமியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர், மூத்த அமைச்சர்கள் கூட நேரில் அஞ்சலி செலுத்தாதது விமர்சனத்திற்கு உள்ளானது. பொன்னுசாமி பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர் என்பதால் தான் அவருக்கு திமுகவின் முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என்று இணையத்தில் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், பொன்னுசாமி உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதன்மூலம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Comments are closed.