மணப்பாறை அடுத்த மருங்காபுரியை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பையா. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 14 வயதுடைய சிறுமியை கடத்தி சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கருப்பையாவை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கருப்பையாவுக்கு ஆயுள் தண்டனையும், கடத்திச் சென்ற குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.