“அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், தெற்கு ரயில்வேயில் 593 ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா இருக்கும்,” என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்., தெரிவித்தார். தெற்கு ரயில்வே சார்பில், பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆர்.என்.சிங் தேசியக்கொடி ஏற்றி வைத்து பேசுகையில், கடந்த 2024 -25ம் நிதியாண்டில், தெற்கு ரயில்வே 12,659 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 4.5 சதவீதம் அதிகம். நடப்பு நிதியாண்டில் ஜூலை 2025 வரை, 5 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. பயணியர் மற்றும் ரயில் சேவைகள் அதிகரித்தாலும் 91.2 சதவீதம் நேரக்கட்டுப்பாடு பராமரிக்கப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில் 3 ஜோடி புதிய ரயில்கள் இயக்கப்பட்டன. பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில், 5,150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கூடுதல் தேவைக்காக, 108 பொதுப் பயணியர் பெட்டிகள், 90 ரயில்களில் சேர்க்கப்பட்டன. 4 வந்தே பாரத் ரயில்கள் 20 மற்றும் 16 பெட்டிகளாக நீட்டிக்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில், 2,800 கி.மீட்டர் பாதையில் வேகம், 80 முதல் 90ல் இருந்து 100 மற்றும் 110 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டது. மேலும், 415 கி.மீ., பாதையில், வேகம், 110ல் இருந்து 130 கி.மீ.,யாக உயர்த்தப்பட்டது. அம்ரித் நிலைய மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 90 ரயில் நிலையங்களில், 13 நிலையங்கள் மே 22ம் தேதி திறக்கப்பட்டன. மேலும், 15 ரயில் நிலையங்கள் தயாராக உளளன. மீதம், டிசம்பர் 2025க்குள் முடிக்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தெற்கு ரயில்வேயில், 593 நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Comments are closed.