திருச்சி, துவாக்குடி பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாததைக் கண்டித்து, நேற்று ( 24.04.2023 ) இரவு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட செடி மலை முருகன் கோவில் தெருவில் உள்ள குடிநீர் பிரதான குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் சில நாட்களாக குடிநீர் வரவில்லை. பழுது நீக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில், தொடர்ந்து டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீரும் சீராக வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. பழுதடைந்த குடிநீர் குழாயை விரைவில் சீராக்க வேண்டும். அது வரை லாரிகளில் வழங்கப்படும் தண்ணீரும் சுமார் 24,000 லிட்டருக்கு மேலாக சீராக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிமுக கவுன்சிலர் சாருமதி தலைமையில் தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று இரவு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினா் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தியதை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.