திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர்- * திருச்சியில் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு…!
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி வந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ராஜ கண்ணப்பன் நீண்டநாள் அரசியல் அனுபவம் உள்ளவர். அவர் நிலை தவறி இருக்கிறாரா? என தெரியவில்லை. இதற்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர அமித்ஷா முயற்சி எடுத்து வருகிறார். அதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தி வருகிறார். அதிமுக-பாஜக கூட்டணியில்
விஜய் இணைவது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். கொள்கை வேறாக இருந்தாலும் திமுகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். பாமக நிறுவனர் ராமதாசை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை சந்தித்தது குறித்து அவர்கள் இருவரிடம் தான் கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. முதல்வர் வேட்பாளர் குறித்து அமித்ஷா தெளிவாக தான் பதில் அளித்துள்ளார். திமுகவை வீழ்த்த ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என அமித்ஷா முயற்சி செய்தார். 2021லும் அவர் முயற்சி செய்தார். 2026-ல் அது பலன் அளித்துள்ளது. பாமக, தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா என்பது குறித்தான ஜோசியம் எனக்கு தெரியாது. எங்களின் ஒரே இலக்கு திமுக ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவது தான். போதை பொருள் பழக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவி உள்ளது. இதை சரி செய்யாமல் தேர்தல் குறித்து கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். கூட்டணி ஆட்சி அமைந்தால் துணை முதல்வர் பதவி கேட்பீர்களா என்கிற செய்தியாளர் கேள்விக்கு தற்பொழுது தான் கூட்டணி பலப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளது பொறுத்திருந்து பாருங்கள் என்றார். பேட்டியின்போது முன்னாள் எம்எல்ஏ ராஜசேகர், தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.