Rock Fort Times
Online News

திருச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- புளூடூத் முலம் பொருட்கள் விற்பனை செய்வதை நீக்க வலியுறுத்தல்…!

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் திருச்சி மாவட்டம் சார்பாக இன்று(27-06-2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட கவுரவ தலைவர் ஜெகநாதன், செயலாளர் ஜெயபால், பொருளாளர் முத்து, மாவட்ட துணை தலைவர்கள் குழந்தைவேலு , லோகநாதன் உள்பட 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நியாயவிலைக்கடைகளில் தற்பொழுது புளூடூத் மூலம் மின்னனு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளும் போது ஒரு குடும்ப அட்டைக்கு பொருள் விநியோகம் செய்திட குறைந்தபட்சம் 8 நிமிடத்திலிருந்து 10 நிமிடம் வரை ஆகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 50 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பொருட்கள் விநியோகம் செய்ய முடிகிறது. ஆகையால் பொதுமக்களுக்கும், நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் மோதல் போக்கு ஏற்படுவதுடன் பணியாளர்கள் புகார்களுக்கு உள்ளாகும் நிலையும் உருவாகிறது. இதனை களையும் பொருட்டு புளூடூத் முலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது காலதாமதம் ஏற்படாத வகையில் எளிமைப்படுத்தப்பட வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு நகர்வு செய்யப்படும் பொருட்களில் அரிசி 2 முதல் 5 கிலோ வரையிலும், சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை ஆகிய பொருட்கள் 1 கிலோ முதல் 2 கிலோ வரையிலும் எடை குறைவாக வழங்கப்படுகிறது. எனவே அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும். நியாயவிலைக்கடை பணியாளர்களில் 40 சதவீதம் பேர் மகளிரும், 5 சதவீதம், மாற்றுத்திறனாளிகளும் பணிபுரிகின்றனர். எனவே நியாயவிலைக்கடைகளில் உள்ள பணிச்சுமையை கருத்தில் கொண்டு எடையாளர் ஒருவர் அனுமதிக்கப்பட வேண்டும், அதுவரை வெளிப்பணி மூலம் உதவியாளர் ஒருவரை பணியமர்த்திகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எங்களுடைய கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் ஜூலை 14.7.2025 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்