தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கிறது. இந்த தேர்தலில் முதல் முறையாக களம் காண இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் வெற்றிக்கான வியூகத்தை அமைத்து வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கும் மக்கள் சந்திப்பு திட்டம் ஜூலைக்கு பிறகு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.தற்போது அந்த முடிவை மாற்றியமைத்து இருக்கிறார், விஜய். இப்போதைக்கு மக்கள் சந்திப்பு திட்டத்தை விஜய் கையில் எடுக்கும் முடிவை விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதாவது நவம்பர் மாதத்திற்கு பிறகு கட்சிக்கு சின்னம் கிடைக்கப்பெற்ற பிறகு, மக்களை சந்தித்தால் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்லவும், தேர்தல் வெற்றிக்கும் அது எளிதாக இருக்கும் என்று விஜய் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.அதற்கு முன்பாக கட்சியை முழுமையாக பலப்படுத்தவே அவர் விரும்புகிறார். அந்தவகையில், மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்கள், மக்கள் பிரச்சினையை மையப்படுத்தி போராட்டங்கள் நடத்த தொண்டர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். மக்கள் சந்திப்பு தற்போதைக்கு இல்லை என்றாலும், கோவையை தொடர்ந்து, வேலூரில் ஜூலை 2-வது வாரத்தில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அதனைதொடர்ந்து தர்மபுரியில் பூத் கமிட்டி மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த பூத் கமிட்டி மாநாடுகளுடன் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ஜூலை 4-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில், வருகிற 04.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு, சென்னை பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலைய செயலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும், நம் வெற்றித் தலைவர் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது. எனவே, கழகச் சட்ட விதிகளின்படி மாநிலச் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழகச் சிறப்புக் குழு உறுப்பினர்கள், கழகத்தின் மாநில நிர்வாகிகள், கழக மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்படி கழகத் தலைவர் ஒப்புதலுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.