ஓபிஎஸ் அணி நடத்தும் திருச்சி மாநாட்டில் அதிமுக கொடி கட்சி பெயரை பயன்படுத்த அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இன்று காவல்துறையினரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இன்று மாநாட்டு திடலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;- புரட்சித் தலைவர் உருவாக்கிய இந்த கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதுவும் சொந்தமாகவில்லை. சின்னம் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதிமுக கொடியில் விருப்பப்பட்டவர்கள் இரட்டை இலை சின்னத்தை வைப்பார்கள் அந்த அடிப்படையில் நாங்களும் வைத்திருக்கின்றோம். சட்ட சிக்கலுக்கு பயந்து வைக்கவில்லை.இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு இன்னமும் நிரந்தரமாக உறுதியாகவில்லை. கட்சி கொடி, கட்சியின் பெயர் எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகிறோம். பயன்படுத்துவோம். வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லை என்று நீதிமன்றம் கூறவில்லை. இது போன்ற பல மாநாடுகளை தமிழ்நாட்டில் நடத்துவோம். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அதிமுகவே ஒரிஜினல் அதிமுக. எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் இரண்டாவது இடம். இவ்வாறு ஆவேசமாக கூறினார். பேட்டியின் போது துணை ஒருங்கிணைப்பாளர் கூ.ப.கிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், எம்.ஆர் ராஜ்மோகன், சாமி கண்ணு, ரத்தினவேலு, வக்கீல் ராஜ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
