லால்குடி அருகே மணல் மாஃபியாக்களை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியவர் மீது சரமாரி தாக்குதல்…! * சிக்குகிறார் அதிமுக நிர்வாகி!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வெங்கடாஜலபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக சிலர் கடந்த 5 ஆண்டுகளாக மணல் அள்ளி கடத்தி வருவதாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். அதிகாரிகள் உத்தரவின்பேரில் லால்குடி வட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்தநிலையில் அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் சேர்ந்து ஆனந்தகுமாரின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த ஆனந்த்குமார் மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் உள்ளிட்டோரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்து புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த புகாரின் அடிப்படையில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. மணல் மாஃபியா கும்பல் குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தவர் குடும்பத்தை அதிமுக நிர்வாகி ஆதரவாளர்களுடன் சென்று தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.