தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ : நடுவழியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்…!
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலைக்கு இன்று (ஜூன் 17) காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் – கோவில்பட்டி இடையே அந்த சரக்கு ரயில் சென்றபோது ஒரு பெட்டியில் இருந்த நிலக்கரி தீப்பற்றி எரிந்து கீழே விழுந்தது. இதனால் இருப்பு பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது அந்த பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே இருப்புப் பாதை பராமரிப்பாளர் வேலுச்சாமி உள்ளிட்ட ஊழியர்கள், ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி விழுந்து புற்களில் தீப்பற்றி எரிவதை பார்த்து கடம்பூர் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். கடம்பூர் ரயில்வே ஊழியர்கள் சரக்கு ரயிலில் இருந்த கார்டுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்த சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. மேலும் பெட்டிகளை ஆய்வு செய்ததில் 17-வது பெட்டியில் இருந்த நிலக்கரியில் தீப்பிடித்து புகை வெளிவருவது தெரியவந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோவில்பட்டி மற்றும் கழுகுமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து வீரர்கள் தீயை அணைத்தனர். இதன் காரணமாக கோவில்பட்டி வழியாக செல்லும் திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரயில், நள்ளி ரயில் நிலையத்திலும், சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத், விருதுநகர் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர் கோவில்பட்டி ரயில் நிலையத்தை கடந்து ரயில்கள் சென்றன.
Comments are closed.