திருச்சி மாவட்ட காவல்துறைக்கு வரப்பெற்ற 57 கையடக்க கேமராக்கள், ரோந்து வாகனங்கள் ஆகியவற்றை காவலர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் நடைபெற்றது. இதில், எஸ்.பி செ.செல்வ நாகரெத்தினம், 57 கையடக்க கேமராக்களை காவலர்களின் சட்டை பையில் பொருத்தினார். மேலும், 44 இரு சக்கர ரோந்து வாகனங்கள், 11 நான்கு சக்கர ரோந்து
வாகனங்கள் ஆகியவற்றை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகன காவலர்கள் அவரவர் பணி துவங்கும் போது மேற்கண்ட கேமராவில் சார்ஜ் உள்ளதா என சரிபார்த்து பணியினை துவங்க வேண்டும்.
எந்தவொரு தகவல், பிரச்சனை சம்பந்தமாக விசாரணைக்கு செல்லும்போது கேமராவை ஆன் செய்து பதிவு செய்ய வேண்டும். பணிமுடியும்போது காவல் நிலையங்களில் அதன் பதிவுகளை காவல் நிலைய கணிபொறியில் பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும்.
கேமரா பதிவின் மூலம் பிரச்சனையின் போது காவல்துறை பொதுமக்களிடையே நடைபெறும் விவாதங்களுக்கு உண்மை நிலை காண ஏதுவாக இருக்கும். இந்த கேமரா மூலம் ஒவ்வொருவரது இருப்பிடத்தை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க இயலும். இதன் மூலம் காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் ரோந்து பணியினை செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் கண்டறிய முடியும்
என்று தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் ஏதேனும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க நேரிட்டால் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண் 89391 46100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என எஸ்.பி.செல்வநாகரெத்தினம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.