Rock Fort Times
Online News

நாகையில் ஆயுதப்படை பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

திருச்சி மாவட்டம் உறையூர் அருகே மேலபாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் மகள் கவிப்பிரியா (வயது 27). இவர் நாகை ஆயுதப்படை பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் சாப்பிடுவதற்காக, தான் தங்கி இருந்த காவலர் குடியிருப்புக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மீண்டும் அவர் பணிக்கு வரவில்லை. சக போலீசார் கவிப்பிரியாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர். அந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக கவிப்பிரியா தொங்கிக் கொண்டிருந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கவிப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இதுகுறித்து வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து, கவிப்பிரியா பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கவிப்பிரியா கடந்த 2020-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்