Rock Fort Times
Online News

களத்தில் இறங்கிய திருச்சி சரக டிஐஜி டீம்: காவிரி, அமராவதி ஆறுகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 26 லாரிகள் பறிமுதல்- திமுக முக்கிய புள்ளி சிக்குகிறார்…!

கரூர் அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் சிலர் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் சட்ட விரோதமாக மணல் அள்ளி கடத்துவதாக திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கும்பலை கையும்- களவுமாக பிடிக்க டிஐஜி “ஸ்பெஷல் டீம்” ஒன்றை அமைத்தார். அவர்கள் காவிரி ஆறு மற்றும் அமராவதி ஆறு பகுதிகளில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இன்று( ஜூன் 5) அதிகாலை 20க்கும் மேற்பட்ட லாரிகளில் ஒரு கும்பல் மணல் அள்ளிக் கொண்டு இருந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைக்க முயன்றனர். ஆனால், போலீசாரை கண்டதும் மணல் அள்ளிக் கொண்டு இருந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பின்னர் டிஐஜி வருண்குமார் உத்தரவின்பேரில்  12 டிப்பர் லாரிகள், 14 மணல் லாரிகள் என 26 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரே நேரத்தில் 26 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து திருச்சி சரக டிஐஜி வருண் குமார் விசாரணை நடத்தியதில், அந்த லாரிகள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முக்கிய புள்ளி ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. அவர் திமுகவில் முக்கிய பொறுப்பிலும் இருந்து வருகிறார். அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்ட எஸ்பி ஆக வருண்குமார் பொறுப்பேற்ற பிறகு மணல் கடத்தல், போதை பொருட்கள் விற்பனை, புகையிலை பொருட்கள் விற்பனை, லாட்டரி விற்பனை, ஏழைகளை ஏமாற்றி நிலத்தை அபகரிப்பவர்களை துணிச்சலாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு திருச்சி சரக டிஐஜி யாக பதவி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மணல் கடத்தல் விஷயத்திலும் தயவு தாட்சண்ய மின்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்