எல்பின் நிதி நிறுவன மோசடி வழக்கில் புகார் அளித்தவர்கள் திருச்சி சிறப்பு புலனாய்வு துணை கண்காணிப்பாளரிடம் நேரில் ஆஜராக அறிவுறுத்தல்…!
திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு ராஜா என்கிற அழகர்சாமி, ரமேஷ்குமார் ஆகியோரை நிர்வாக இயக்குனர்களாக கொண்டு எல்பின் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. திருச்சி மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலும் எல்பின் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்றும், நிலம் தருவோம் என்றும் பல்வேறு வாக்குறுதிகளை கூறி, பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று கோடிக்கணக்கில் ஏமாற்றி விட்டனர். முதலீடு செய்த பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததின் பேரில் 2013-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவுகளில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்து திருச்சி சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது புலன் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் புலன்விசாரணை முடிந்து எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்து எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வு குழு காவல் துணை கண்காணிப்பாளரிடம் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி தங்களது புகார் மனுவினை விரைந்து அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தாங்கள் ஏற்கனவே புகார் மட்டுமே அளித்திருந்தால் தங்களிடம் விசாரணை செய்து வாக்குமூலங்கள் பதிவு செய்ய வேண்டியிருப்பதால் தங்களிடம் உள்ள பணபரிவர்த்தனை சம்மந்தப்பட்ட ஆவணங்களுடன் சிறப்பு புலனாய்வு காவல் துணை கண்காணிப்பாளரிடம் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments are closed.