Rock Fort Times
Online News

பழம் பெருமை வாய்ந்த மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் நாளை (மே 13) இடிப்பு…!

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் தில்லை நகர், உறையூர் வழியாக மலைக்கோட்டை பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை கடந்து தான் சத்திரம் பேருந்து நிலையம் சென்றன. இந்த பாலம் மிகவும் பழைமை வாய்ந்தது என்பதாலும், போக்குவரத்து நெருக்கடி காரணமாகவும் அதனை இடித்து விட்டு விசாலமாக கட்ட மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டன. அதன்படி, கடந்த ஆண்டு இந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஒன்றரை ஆண்டுகளைக் கடந்தும் பாலப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதற்கு மாநகராட்சி தரப்பில் பணிகளை விரைந்து முடித்தாலும், ரயில்வே நிர்வாகம் தரப்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதாக காரணம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரயில்வே நிர்வாகத்தின் சார்பில், இருப்புப் பாதை செல்லும் பகுதியில் உள்ள பாலத்தை முழுவதுமாக இடித்து அகற்றும் பணி நாளை( 13.05.2025) செவ்வாய்க்கிழமை தொடங்கும் என திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், மலைக்கோட்டை மாரிஸ் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதமாகி வருவதை ரயில்வே ஆலோசனைக் குழு கூட்டத்தில் எடுத்துக் கூறினேன். மேலும், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து தொகுதி மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக பேசினேன். அப்போது மலைக்கோட்டை மாரிஸ் ரயில்வே மேம்பாலம் குறித்துக் கேட்டதில், இருப்புப்பாதை செல்லும் பகுதியில் உள்ள பாலத்தின் கான்கிரீட் கட்டுமானங்கள் இடித்து அகற்றும் பணி மே 13- ம் தேதி தொடங்கும் என ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்தார். மேலும், புதிய கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். எது எப்படி இருந்தாலும் இந்த பாலப் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்பதே திருச்சி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்