திருச்சி, பழைய பால்பண்ணை சிக்னலில் தினம், தினம் கடுமையான போக்குவரத்து நெரிசல்…* சிக்கித் தவிக்கும் ஆம்புலன்ஸ்கள்… பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்!
திருச்சி மாநகரின் மிக முக்கியமான சந்திப்பு பகுதியாக விளங்குவது பழைய பால்பண்ணை சிக்னல் அப்பல்லோ சர்வீஸ் ரோடு மற்றும் காந்தி மார்க்கெட்டிலிருந்து தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் ஒருபுறம், சென்னை, தஞ்சாவூரிலிருந்து திருச்சி நகருக்குள் வரும் வாகனங்கள் மறுபுறம் என அனைத்து வாகனங்களுமே இந்த சிக்னலை கடந்து தான் செல்ல வேண்டும். எனவே பால்பண்ணை சிக்னலில் காலை தொடங்கி இரவு வரை எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படுகிறது. முகூர்த்த நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் நிலைமை படுமோசமாக இருக்கிறது. கூடவே தன் பங்கிற்கு கோடை வெயிலும் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இதனால் வெயிலின் தாக்கம், வாகன புகை, நெரிசல் என வாகன ஓட்டிகள் படாத பாடு படுகிறார்கள். இது ஒருபக்கமென்றால், உயர் மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சாவூர் போன்ற அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு மேல் சிகிச்சைக்கு நோயாளிகளுடன் வரும் ஆம்புலன்ஸ்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் நோயாளிகளை சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க முடியாத சூழலே நிலவுகிறது. எனவே திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை, பழைய பால்பண்ணை சிக்கலில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே வாகன ஓட்டுனர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments are closed.