Rock Fort Times
Online News

அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி பதவி பறிக்கப்பட்டது ஏன்?…

பெரியார் திராவிட கழகம் சார்பில் கடந்த 8-ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்சசைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பொன்முடியின் பேச்சு, கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது, குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல. மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அமைச்சர் பொன்முடிக்கு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்கள் அளித்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதவி பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழியை மீறி செயல்பட்ட அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதேபோல, அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோதமான பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது. இதனால், அமைச்சர் பதவியை இழந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருந்தது. ஜாமீனில் வெளியே வந்த அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  இதனை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மெரிட் அடிப்படையில் நாங்கள் ஜாமீன் வழங்கவில்லை. இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடியாது. ஜாமீன் வேண்டுமா?, அமைச்சர் பதவி வேண்டுமா? என முடிவு செய்து ஏப்ரல் 28க்குள் தெரிவிக்க வேண்டும் என்று அவகாசம் வழங்கி வழக்கை ஒத்தி வைத்தது.இந்த இரு வழக்குகள் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால், இரு அமைச்சர்களும் எந்த நேரத்திலும் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, அவர்கள் இன்று (ஏப்ரல் 27) தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாகவும், அதன் காரணமாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்