செங்கல்பட்டு ரூபி அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் சிங். இவர் தற்போது திருச்சி பஞ்சப்பூர் அய்யனார்குளம் பகுதியில் வசித்து வருகிறார். இவர், கட்டிட வேலைக்காக வடமாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளார். அந்த வட மாநில தொழிலாளர்களான பூகான், தீபக்தாஸ் ஆகியோர் அந்த பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த மேல பஞ்சப்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் ( 20 ), கீழ பஞ்சப்பூர் பகுதியைச் சேர்ந்த தனசேகர் (22), சதீஷ்குமார் (23) மற்றும் மாணிக்கம் (31 ) ஆகியோர் வடமாநில தொழிலாளர்களிடம் இங்கு எதற்காக வந்து உள்ளீர்கள்?, உங்களுக்கு இங்கு என்ன வேலை…என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பஞ்சப்பூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் பூகான் மற்றும் தீபக் தாசை உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில், அவர்கள் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சந்தோஷ், தனசேகர், சதீஷ்குமார், ஆகியோரை கைது செய்தனர். மாணிக்கத்தை தேடி வருகின்றனர்.

Comments are closed.