தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகையில் இன்று(06-04-2025) ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “உதகை விழாவில் பங்கேற்பதால் பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழாவிற்கு செல்ல முடியவில்லை. இதை முன்னதாகவே பிரதமரிடம் தெரிவித்து விட்டேன். இவ்விழாவுக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் சென்றுள்ளனர். தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என தமிழக மண்ணில் இருந்து பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை போக்க வேண்டும். தமிழகத்தின் வலிமையை குறைக்க பா.ஜ., துடிக்கிறது. பட்டினிச்சாவே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி இருக்கிறோம். இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் டாப் கியரில் தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.