ரோஜ்கர் மேளா’ வேலைவாய்ப்பு திருவிழா:
திருச்சியில் 243 பேருக்கு மத்திய அரசு பணி ஆணை! மத்திய மந்திரி அஜய் பட் இன்று வழங்கினார்!
மத்திய அரசின் ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த ஆண்டு அக்டோர் மாதம் 75 ஆயிரம் இளைஞர்களுக்கும், பின்னர், நவம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறியாளர், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பணிகளுக்காக 71 ஆயிரம் இளைஞர்களுக்கும் பிரதமர் பணி ஆணைகளை வழங்கினார். இந்நிலையில், மூன்றாம் கட்டமாக நாடு முழுவதும் சுமாா் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வழங்கினார். கடந்தாண்டு திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு 25 பேருக்கு பணி ஆணை வழங்கினார். தற்போது ‘4வது ரோஸ்கர் மேளா’ திருச்சி ஜங்சன் ரயில் மஹாலில் நடைபெற்றது. முன்னதாக பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார். திருச்சி ரயில் மஹாலில், பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீ அஜய் பட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரயில்வே, அஞ்சல் மற்றும் உயர்கல்வித்துறை போன்ற பல மத்திய அரசுப் பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். 243 பேர் இந்த பணி ஆணைகளை பெற்றனர். இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, எஸ்.ஆர்.எம்.யு துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் மற்றும் ரயில்வே, சுற்றுலாத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
