மதுரையில், சட்டப்படி அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் ராபிடோ, பைக் டாக்ஸி நிறுவனத்திற்கு, தடை விதித்து மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராபிடோ பைக் டேக்ஸி என்ற நிறுவனம் முறையாக அனுமதி பெறாமல், மதுரையில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகனங்களையும் வாகன ஓட்டிகளையும் உறுப்பினர்களாக கொண்டு இயங்கியதை கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் 40-க்கும் மேலான உரிமையாளர்கள் மீது மாநகர வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சட்டப்படி அங்கீகாரம் பெறாத ராபிடோ நிறுவனத்திடம், மொபைல் செயலி வழியாக உறுப்பினர்களை இயக்கி வரும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் ராபிடோ பைக் டேக்ஸி வாகனங்களை பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்படும் வாகன உரிமையாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
