பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி அறிவை கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் சிலர் அவர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வருவது வேதனை தரும் விஷயம் ஆகும். இதுதொடர்பாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். பெண்கள் அமைப்பினரும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இது ஒருபுறம் இருக்க பாலியல் புகார்களில் சிக்கிய பல ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனையடுத்து, பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதுடன், பணி நீக்கம் செய்யப்படுவர். சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில், பாலியல் புகார்களில் சிக்கிய 25 ஆசிரியர்கள் பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்யப்பட்டு உள்ளனர். திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, புதுக்கோட்டை, விழுப்புரம், தர்மபுரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என 7 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். 3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளனர். 46 புகார்கள் வந்த நிலையில் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்ட 25 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களை ரத்து செய்யும் பணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Comments are closed.