புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது அடுத்தடுத்து இரண்டு கார்கள் பயங்கர மோதல்:- 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்…! (வீடியோ இணைப்பு)
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் இருந்து மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த சிகப்பு நிற கார் ஒன்று பயங்கர வேகத்தில் மினி வேன்மீது நேருக்கு நேராக மோதியது.
அதேவேளையில் பின்னால் வந்த காரும் மினி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிகப்பு நிற கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் அந்த காரில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். அதேபோன்று மினி வேனில் வந்த இரண்டு பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், இந்த விபத்தில் காரில் வந்த 3 பேர் மற்றும் மினி வேனை ஓட்டி வந்த டிரைவர் ஆகிய 4 பேர் படுகாயம் வந்தனர். அவர்களை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டுனர்கள் மற்றும் போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தில் பலியான 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக நமணசமுத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் காரில் வந்தவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்றவர்கள் என்பது தெரிய வந்தது. ஆனால் அவர்களது பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ADVERTISEMENT…👇
Comments are closed.