Rock Fort Times
Online News

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேர ஏப்ரல் மாதம் ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு- பிப்.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு…!

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று என்டிஏ அறிவுறுத்தியுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இது ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என 2 பிரிவாக நடைபெறும். இதில், முதன்மை தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது. ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல் என 2 முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடந்தது. சுமார் 13 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில், ஜேஇஇ 2-ம்கட்ட முதன்மை தேர்வு ஏப்ரல் 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக பிப்ரவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதல்கட்ட தேர்வு எழுதியவர்களும் இதில் பங்கேற்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட இதர விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருந்தால், 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்