Rock Fort Times
Online News

திருச்சியில் ஓடும் பேருந்தில் இருக்கை மாறியபோது சாலையில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு-கதவு மூடப்பட்டிருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என சக பயணிகள் குமுறல்…!

திருச்சி, புத்தூர் ஆபிசர்ஸ் காலனியை சேர்ந்தவர் சிராஜுதீன்.  இவரது மனைவி ஜாபர் நிஷா (வயது 55). இவர் தனது மருமகளுடன் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திற்கு செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு இன்று(05-01-2025) காலை வந்தார்.பிறகு கோவை செல்லும் பேருந்தில் இருவரும் ஏறி அமர்ந்தனர். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்தப் பேருந்து ஐயப்பன் கோவில் வழியாக எம்ஜிஆர் சிலை அருகில் உள்ள உழவர் சந்தை சாலையில் சென்று கொண்டு இருந்தது. ஜாபர் நிஷா படிக்கட்டுக்கு எதிரே உள்ள சீட்டில் அமர்ந்து இருந்தார். பின்னர் அவர் திடீரென்று எழுந்து பக்கத்து சீட்டுக்கு செல்ல முயன்றார். அப்போது, பேருந்து வளைவில் திரும்பிய போது அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டோன்மென்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜாபர் நிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து படிக்கட்டு வழியாக யாரும் விழுந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் கதவு மூடப்படுகிறது. ஆனால், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த பேருந்தின் கதவு மூடப்படவில்லை என்று கூறப்படுகிறது. கதவு மூடப்பட்டிருந்தால் அவர் படிக்கட்டி லாவது விழுந்து உயிர் பிழைத்திருக்கலாம் என்று சக பயணிகள் குமுறினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்