அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றமும் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நபர் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. அமைச்சர்களுடன் ஞானசேகரன் இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், தி.மு.க.,வினர் இதனை மறுத்து வருகின்றனர். இந்தநிலையில் த.வெ.க., தலைவர் விஜய் இன்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில், அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், ‘பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை யாரிடம் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும், எந்த பயனும் இல்லை என்பது தெரிந்ததே, அதற்காகவே கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும்’, எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், மாணவி விவகாரம் தொடர்பாக த.வெ.க., தலைவர் விஜய், இன்று(30-12-2024) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மதியம் 1 மணி அளவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, அண்ணா பல்கலை விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆளுநரிடம் விஜய் புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது.
Comments are closed.