திருச்சி அருகே உள்ள ஜீயபுரம் கூடலூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐந்து பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். பிறகு அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திருச்சி மதுரை ரோடு குஜிலி தெரு பகுதியை சேர்ந்த மலர் மன்னன் (வயது 56) திருச்சி காட்டூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 63) திருச்சி பாலக்கரை துரைசாமி புறம் பகுதியைச் சேர்ந்த அருள் ( வயது 38), திருச்சி அன்பு நகர், கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில் (வயது 40) திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் காவலர் குடியிருப்பில் வசிக்கும் ராஜா கார்த்திக் (வயது 37) என்பது தெரியவந்தது. பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் கைதான ராஜா கார்த்திக் போலீஸ்காரர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இவர் திருச்சி மாநகர் எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக அவர் பணியாற்றி வந்த போது காந்தி நகர் கஞ்சா வியாபாரியுடன் கூட்டு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 2022ம் ஆண்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் மீண்டும் இதுவரை ராஜா கார்த்திக் பணிக்கு சேரவில்லை. இதற்கிடையே பணம் வைத்த சூதாடி மீண்டும் அவர் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளார். சூதாட்ட கும்பலிடமிருந்து ரூபாய் 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 6 விலை உயர்ந்த செல்போன்கள், 7 மோட்டார் சைக்கிள்கள், 52 சீட்டு கட்டுகள் கைப்பற்றப்பட்டன.
