திருச்சி, பச்சைமலை பகுதியில் சிறகடித்து பறக்கும் 126 அரிய வகை பட்டாம்பூச்சி இனங்கள்… (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த பச்சைமலை பகுதியில் சமீபத்தில் பட்டாம்பூச்சி இனங்களின் கணக்கீடு பணி மேற்கொள்ளப் பட்டது. இந்தப்
பணியானது, திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் பெரியசாமி அறிவுறுத்தலின்படி நடைபெற்றது. இந்தப் பணியை இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு நிறுவனம் மேற்கொண்டது. கோயம்புத்தூர், சென்னை, சேலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். செங்காட்டுப்பட்டி, விரிவாக்க ஆர்.எப், காளியம்மன் கோவில் திட்டு ஆர்.எப், சோலைமத்தி ஆர்.எப், கன்னிமார் சோலை ஆர்.எப், மேலூர் ஆர்.எப் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா பகுதி (மேல் செங்காட்டுப்பட்டி), மங்களம் அருவி போன்ற பகுதிகளில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. இவற்றுடன் உலர் மற்றும் ஈரத் தன்மை கொண்ட இலையுதிர் காடுகள், இவற்றுடன் ஆறுகள் பாயும் பகுதி மற்றும் இரண்டாம் நிலைக் காடுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வு 2024 டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் துறையூர் வன அலுவலகம் மற்றும் அதன் அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கணக்கெடுப்பின் முடிவில் பச்சைமலை
பகுதியில் நீல அழகி, மயில் அழகி, மஞ்சள் அழகி, நாடோடி, கருப்பு நாடோடி, கண்ணாடி வரியன், ஆரஞ்சு வரியன், ஆமணக்கு சிறகன், வெண்கருப்பு சிறகன், சாம்பல் மின்னி, நாமத்தாவி, மற்றும் வயல் துள்ளி போன்ற பட்டாம்பூச்சிகள் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்பட்டன. ஆற்றுப் பகுதிகளில் இரட்டை வால் சிறகன் மற்றும் அந்திச்சிறகன் போன்ற பட்டாம்பூச்சிகள் மரத்தில் இருந்து வடியும் பாலை உண்ணும் காட்சிகள் பதிவானது. மொத்தம் 126 பட்டாம்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டன. தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் 175 இனங்கள் வரை பதிவுசெய்யும் வாய்ப்பு உள்ளது என மாவட்ட வன அலுவலர் கிருத்திகா தெரிவித்துள்ளார்.
Comments are closed.