Rock Fort Times
Online News

அரசு பேருந்தில் பயணச்சீட்டு வாங்கக்கோரி கட்டாயப்படுத்திய நடத்துனரை கண்டித்து பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்…!( வீடியோ இணைப்பு)

அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம், துறையூர், பொன்னுசங்கம் பட்டியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ – மாணவிகள் அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்டு சற்று தூரம் தள்ளியுள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். வழக்கமாக இந்த கிராமத்திற்கு காலை 7-45 மணிக்கு ஒரு பேருந்தும், 8.30 மணி மற்றும் 9 மணிக்கு இரு பேருந்தும் என இயக்கப்பட்டு வந்தது. ஆனால், காலை 8.30 மணிக்கு வரும் பேருந்து கடந்த ஒரு மாதமாக இயக்கப்படவில்லை. இதனால், காலை 7-45 மணி பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள் செல்கின்றனர். அவ்வாறு அரசு பேருந்தில் ஏறி செல்லும்போது அந்த மாணவ, மாணவிகளிடம் நடத்துனர் டிக்கெட் எடுக்க சொல்லி கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து இன்று(02-12-2024) துறையூர் – முசிறி செல்லும் நெடுஞ்சாலை பொன்னுசங்கம் பட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் இயக்கப்பட்ட ஒரு பேருந்தை ஏற்கனவே நிறுத்தி விட்டார்கள். தற்போது இயக்கப்படும் 7-45 மணி பேருந்தில் எங்களது பிள்ளைகளிடம் நடத்துனர் டிக்கெட் எடுக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார். இதுதொடர்பாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்