Rock Fort Times
Online News

புதுச்சேரியில் அதி கனமழை: வெள்ளக்காடாக மாறிய வீதிகள்- களத்தில் இறங்கிய ராணுவ வீரர்கள்…! (படங்கள் இணைப்பு)

புதுச்சேரி அருகே நேற்றிரவு “பெஞ்சல்” புயல் கரையை கடந்த நிலையில், அங்கு 47 செ.மீ அளவிற்கு அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, புதுவை வீதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  அங்குள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிக்கு ராணுவத்திற்கு மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்தார்.

அதன்பேரில், சென்னையில் இருந்து விரைந்த ராணுவ வீரர்கள் 40 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்டு படகுகள் மூலமும், வாகனங்கள் மூலமும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று வருகின்றனர்.  பலத்த காற்று வீசியதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாய்ந்துள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முகாம்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அங்கு வெள்ளத்தில் இருந்து மீட்கப்படுபவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றும் புதுச்சேரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடற்கரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவர், தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் காரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், புதுச்சேரியில் அதிக அளவிலான மழை பெய்துள்ளது. மோட்டார் மூலம் மழைநீரை அகற்றும் பணி நடக்கிறது. ராணுவ வீரர்கள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது என்றார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்