கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமானது, எங்கள் கால்களை நம்பி லட்சிய பயணம் தொடரும்- திருச்சியில் சீமான் பேட்டி…!
சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி யின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தி.மு.க வும் பா.ஜ.க வும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் தான் உள்ளார்கள். இதற்கு உதாரணம் ஜெயலலிதா நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் அதிமுகவுடன் கூட்டணியிலிருந்தும் பாஜக பங்கேற்கவில்லை. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் திமுக கூட்டணியில் இல்லாவிட்டாலும் பாஜக பங்கேற்றது. இதுதான் நேரடியான உறவுக்கு சாட்சி. கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமானது. எங்கள் கால்களை நம்பி தான் எங்கள் லட்சிய பயணம் தொடரும். நாங்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து தான் போட்டியிடுவோம். அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசி வருவது அவரின் நம்பிக்கைதான். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என அவரே கூறினால் ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆட்சி சிறப்பாக இருக்கிறது என மக்கள் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் நிருபர்கள், அதிமுகவுடன் கூட்டணியில் இல்லை என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளாரே என்று கேட்டதற்கு, இதை என்னிடம் கேட்க வேண்டாம் .நாங்கள் என்ன செய்கிறோம் என்று மட்டுமே கேளுங்கள் .நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம் என்றார்.

Comments are closed.